ஓவியனின் கதை : ப. தங்கம்
9.6.1950இல் சித்திரக்கலாசாலையில் மாணவனாக சேர்ந்ததிலிருந்து தன் அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார் தங்கம் அண்ணன். அவர் மீது அன்புகொண்ட அவரது தாய்மாமா கோவிந்தசாமி சித்திரக்கலாசாலையில் சேர்க்கிறார். படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு ஒரு போட்டோ ஸ்டுயோவுக்கு வேலைக்குப் போகிறார். 1953ஆம் ஆண்டு தினக்கூலியாக மூன்று ரூபாய் சம்பளம். ஒரு ஆள் அன்று சாப்பிடப் போதுமாம். மேல்படிப்பு படிக்க கன்னையன் என்பவர் படிப்பதற்கு உதவிபுரிந்துள்ளார். இ.எஸ்.எல்.சி. டிராயிங் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரின் அம்மா ஆசீர்வாதம் செய்து அரசாங்க வேலை கிடைக்க வாழ்த்தியுள்ளார்கள்.
1959ஆம் ஆண்டு மதுரையில் ஓவிய ஆசிரியர் பணி. அங்கு சென்றபோது அம்மா சொன்ன கோபுரத்தை பார்த்தால் முதலில் கும்பிடு என்பது நினைவிற்கு வந்தது. அம்மாவை நினைத்துக்கொண்டு கோபுரத்தை வணங்கிவிட்டு வேலைக்கு செல்கிறார். வேலைக்குச் செல்ல பேண்ட், சட்டை அணிந்து வரவேண்டும். கையில் பணம் இல்லாததால் முன்பணம் வாங்கி அதை மூன்று தவணையில் திருப்பித் தந்திருக்கிறார். வசதியாக உள்ளவர்களிடம் படிப்பு அமையாது. படிப்பவர்களிடம் வசதி இருப்பதில்லை. ஆனாலும் இவ்வளவு கஷ்டங்களையும் சுமந்துகொண்டு தன் ஓவியப்பணியை சிறப்பாக அமைத்துக்கொண்டுள்ளார் தங்கம் அண்ணன். 1961ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரியும்,1965ஆம் ஆண்டில் மருத்துவமனையும் துவங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு தஞ்சைமருத்துவக்கல்லுரியில் வேலைக்கு சேர்ந்த முதல் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் வரை எழுதியிருக்கிறார்.
உதவி என வருபவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். அனைத்து, நண்பர்களையும், மருத்துவர்களையும், வீட்டில் வேலைசெய்தவர்களையும், ஞாபகம் வைத்து எழுதியுள்ளார். தங்கம் அண்ணனை எனக்கு சிறுவயதிலிருந்து தெரியும். அப்பாவுக்கு குடும்ப நண்பர், மாமனாரின் நண்பர். என் திருமணத்திற்கு போட்டோ எடுத்தவர் தங்கம் அண்ணன். அவர் என் திருமண போட்டோவை பிரேம் போட்டு அன்பளிப்பாக தந்தார். இன்றும் அந்த போட்டோ இருக்கிறது. இதய ஆபரேஷன் செய்தவர். அதையும் பொருட்படுத்தாமல் வந்து புத்தகத்தை தந்தார். அவர் வீட்டிற்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். எப்போதும் புன்சிரிப்புடன் வரவேற்பார். அண்ணனைப் போல் நமக்கு தெரியாதவர்கள் ஏராளம் பேர் இருப்பார்கள். நம்மால் முடிந்தவரை நன்றாக படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் என எண்ணம் வருகிறது. இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அனைவருக்கும் அவரவர் சிறுவயதின் நினைவுகள், உறவினர்கள் செய்த உதவிகள் என பல எண்ணங்கள் மனதில் நிற்கும்.
ஓவியனின் கதை, ப. தங்கம் (அலைபேசி 94866 34944), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், 6ஆவது தெரு மேற்கு, மாரியம்மன்கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501, தமிழ்நாடு
Comments
Post a Comment