அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்

        அண்மையில் எங்கள் பேரன் தமிழழகன், எங்கள் வீட்டிலிருந்த ஒரு சில்வர் சம்படத்தைப் பார்த்து, "இதில் எதற்காக பெயர் எழுதியிருக்கிறது?" என்று கேட்டான். திருமணத்திற்குப் பிறகு வாங்கிய அந்த சம்படத்தில் என் பெயரைக் குறிக்கும் வகையில் ஆங்கில இனிஷியல் எழுத்துக்களான  ஜே.பி. என்றிருந்தது. அப்போது அவனிடம், "அப்போதெல்லாம் அன்பளிப்பு தரும் பொருள்களில், கையில் மிகச்சிறிய உளியைக்கொண்டு பெயரை வெட்டித்தருவார்கள். ஒரு எழுத்துக்கு இத்தனை பைசா என வாங்குவார்கள். சில சமயங்களில் முழுப்பெயரும் போடுவர். முன்னும் பின்னும் சிறிய டிசைனோ, பூவோ போட்டுத்தருவார்கள். காலப்போக்கில் பெயர் வெட்டித்தரவும் மிஷின் வந்துவிட்டது" என்றேன்.

    அவன் கேட்ட கேள்வி என்னை ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றுவிட்டது. அப்போது நான் திருமண விழாக்களுக்கு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். குடம், தவலை, செப்புப்பானை, அண்டா, குண்டான்சட்டி, இட்லி பானை, குத்துவிளக்கு, குவளை, கூஜா, சாப்பாட்டு கேரியர் போன்றவற்றை அன்பளிப்பாக மணமக்களுக்கு தருவார்கள். அவை பெரும்பாலும் பித்தளையிலும்  எவர்சில்வரிலும் இருக்கும். அதில் அன்பளிப்பு தருபவர்களின்  பெயர் வெட்டப்பட்டிருக்கும். அவ்வாறே எங்கள் இல்ல திருமண நிகழ்வுகளில்  மாமா, அத்தை, மச்சான், அக்கா, அண்ணன், அண்ணி, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா போன்ற உறவினர்களும், நண்பர்களும் அன்பளிப்புகள் தந்துள்ளதைப் பார்த்துள்ளேன். அன்பளிப்பாக வந்த பாத்திரங்களை மணமக்களுக்கான சீர் சாமான்களில் சேர்த்துவிடுவார்கள்.

எனக்கு வந்த அன்பளிப்பு, மற்றும் சீர்வரிசையில் பயன்பாட்டிலுள்ள சில பொருள்கள்

    என் திருமணத்தின்போது எங்கள் வீட்டில் எனக்கு சீர்வரிசையாகத் தந்த பொருள்களுடன், உறவினர்கள் அன்பளிப்பாகத் தந்த பொருள்களும் இருந்தன. அதில் அவற்றைத் தந்தவர்களின் பெயர் வெட்டப்பட்டிருந்தது. மாமியார் வீட்டிற்குச் சென்றபின் அங்கும்  பாத்திரங்களில் பெயர் வெட்டியிருப்பதைப் பார்த்தேன். அப்போதுதான் அனைவருடைய வீட்டிலும் இவ்வாறாகப் பொருள்கள் இருக்கும் என்பதை அறிந்தேன். 

    இவ்வாறான பொருள்களை வீட்டில் உபயோகிக்கும்போது அன்பளிப்பு தந்தோர் மற்றும்  சீர்வரிசை தந்த பெற்றோரின் நினைவு வந்துவிடும்.  ஒவ்வொரு பாத்திரத்தையும் பயன்படுத்தும்போது அந்தந்த பொருளை இன்னார் தந்தது என்று பெருமையோடு கூறியிருக்கிறேன். கணவரிடமும், பின்னர் மகன்களிடமும் கூறியதை இப்போது பேரன்களிடம் கூறுகிறேன்.

    திருமணம் முடிந்து, மறுவீட்டிற்கு மணமகள் போகும்போது முதலில் அரிசிப் பெட்டியுடன் (ஓலைக்கொட்டான்) அனுப்பவேண்டும் என்று கூறுவார்கள். (இப்போது ஓலைக்கொட்டானுக்குப் பதிலாக சில்வர் அன்னக்கூடையோ, சில்வர் வாளியோ தருகிறார்கள்). ஓலைக்கொட்டானில் அரிசி, அதன் மேல் படி,  அன்னக்கை, சிணுக்கறுக்கி, தட்டு, டம்ளர்,  காமாட்சி விளக்கு போன்றவற்றை ஒற்றைப்படையில் வைத்துத் தருவதை அரிசிப்பெட்டி தருவது என்பர். அவ்வாறு தரும்போது பெற்றோரும், உறவினர்களும் மணமக்களை வாழ்த்தி, விபூதி பூசி ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் கும்புட்டுப்பணம் தருவார்கள்.  அந்தப்பணத்தை விட கொடுப்போரின் பாசம் பெரியதாகத் தெரியும். அப்பணத்தில்,  ஞாபகமாக பிடித்த பொருளை வாங்கிக்கொள்ளும்படி சொல்வார்கள். எங்கள் அம்மாயி, எங்கள் மூர்த்தி அண்ணனின் திருமணத்தின்போது மணமக்களுக்கு ஐந்து ரூபாய் தந்தது என் நினைவில் உள்ளது. 

    மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணுடன்  முதலில் போவது அரிசிப்பெட்டியே. பிறகுதான் மற்ற சீர்வரிசைப்பொருள்களை அனுப்புவர். பித்தளை அல்லது எவர்சில்வர் தவலை, குடம், டிரம் போன்றவற்றில் பலகாரங்களை நிரப்பி அனுப்புவர். பெண்வீட்டார் மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு நாத்தனார் பலகாரம் என்று கூறி தனியாக ஒரு பாத்திரத்தில் பலகாரங்களைப் போட்டுத் தருவார்கள்.  இன்றும் பல குடும்பங்களில் சீர்வரிசைப் பொருள்கள் தரும் பழக்கம் உள்ளது. கொடுப்பவர்களும், பெறுபவர்களும் அதனைப் பெருமையாகக் கருதுகின்றனர். சில குடும்பங்களில் மணமகளுக்கு சீர்வரிசைப்பொருள்கள் தரும்போது நாத்தனார், கொழுந்தியாள், மாமி ஆகியோருக்கும் நினைவிற்காக பித்தளை அல்லது எவர்சில்வரில் சில பொருள்கள் எடுத்து வழங்குவதும் உண்டு.       

    இன்றைக்கும் சீர் சாமான்கள் தரும் வழக்கம் இருந்துகொண்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில்  இப்போதெல்லாம் சீர்வரிசையாகத் தரப்படுகின்ற பித்தளை, சில்வர் சாமான்களுக்குப் பெயர் வெட்டித் தருகிறார்கள். கொரானோ காலத்துக்குப்பிறகு பித்தளை சாமான்கள் குறைந்துவிட்டது. சிலர், வீட்டிலுள்ள, முன்னோர் வைத்திருந்த பழைய பித்தளை சாமான்களை பாலிஷ் பிடித்து அதில் பெயர் வெட்டி வாங்கிச்செல்கிறார்கள். பெரும்பாலும் பூஜை சாமான்கள் அனைத்தும் பித்தளையில்தான்  வாங்குகிறார்கள். 

  அப்போதெல்லாம் வீட்டில் அரிசி கொட்டி வைக்கவும், குடிநீரைப் பிடித்துவைக்கவும், நெல் அவிப்பதற்கும், பெரிய குவளை, தவலை போன்ற பாத்திரங்கள் பயன்பட்டன.  

  எனக்கு கொடுத்த சீர் சாமான்களில் பெரிய பித்தளைக்குவளை, செப்புப்பானை (காசிப்பானை), சில்வர் குவளை, சில்வர் தவலை, சில்வர் குடம், சில்வர் டிரம், சில்வர் கொத்துசட்டி, சில்வர் கேரியர், சில்வர் ஜக், சில்வர் வாளி, சில்வர் எண்ணெய் ஜாடி, கூஜா, குக்கர், பிற அன்றாடப் புழங்குபொருள்கள் இருந்தன. இவற்றில் என் பெயர் (அப்பாவின் இனிஷியலுடன்) வெட்டப்பட்டிருக்கும். எனக்கு அன்பளிப்பாக வந்த பொருள்களில் அன்பளிப்பு தந்தோரின் பெயரும், என் பெயரும் வெட்டப்பட்டிருக்கும். இவ்வாறாக எனக்கு அம்மா, சகோதர சகோதரிகள், உறவினர்கள், மாமியார் தந்த, பெயர் வெட்டப்பட்ட, பொருள்கள்  அனைத்தையும் பத்திரமாக பயன்படுத்துகிறேன், அவர்களின் நினைவுகளோடு.

நன்றி : கட்டுரை எழுதத்தூண்டிய பேரன் பா.தமிழழகன், சில தகவல்களைத் தந்த என் பெரிய அக்காவின்  மகன் க. ஜெகதீஷ். 

Comments

  1. பொருள்களோடு, பொருள்களில் பெயர்களைப் பொறித்துத் தங்கள் நினைவுகளையும் வழங்கி மகிழுதல் தமிழகத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த , இருக்கின்ற மரபாகும். வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்