பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

அண்மையில் பழுவூரிலுள்ள கோயில்களுக்குச் சென்றிருந்தோம். அவற்றில் மேலப்பழுவூர் கோயிலைப் பற்றி இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி. 
-------------------------------- 
மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் ஆன இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.  

பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இவ்வூர் மன்னு பெரும்பழுவூர் என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோட்சனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம் ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர்.


இக்கோயில் சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல்வது போன்ற நிலையில் உள்ளது. இறங்கி சென்றதும் மூன்று நிலைகளுடன் உள்ள ராஜ கோபுரம் உள்ளது. கோபுரத்தின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் உள்ளது.  இந்த மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன நந்தியம்பெருமான் எழுந்தருளியுள்ளார். அருகே பலிபீடம் உள்ளது.

மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவராக கருவறையில் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவத்தில் உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார்.  மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி வரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்று இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது.  




கோயிலின் திருச்சுற்றில் வலப்புறம் ஜமதக்னி ரிஷி, சூரியன்,  ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன. அகோரவீரபத்திரரும் நவகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தனி சன்னதியில் உள்ளனர்.  அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சன்னதி உள்ளது. அதற்கெதிராக சிங்கத் தூணின் பகுதி உள்ளது. அடுத்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோயிலின் திருச்சுற்றில் இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து விநாயகர், உமாமகேஸ்வரர், இரு நாகர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, பைரவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

9 செப்டம்பர் 2015 அன்று இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஜேஷ்டாதேவிக்கு தனி சன்னதியில் உள்ளதால் வளர் பிறை அஷ்டமிதிதியில் வழிபட குழந்தைப் பேறும், நிறைந்த செல்வமும் உண்டாகும் என்ற நம்பிக்கையும், கஜலட்சுமியும் மகாவிஷ்ணுவும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் காணப்படுகிறது.


இக்கோயிலுக்கு அருகே உள்ள கீழப்பழுவூரில் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஆலந்துறையார் கோயிலும், கீழையூரில் முற்காலச் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரட்டைக்கோயிலும் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்றோம். இவை இப்பகுதியில் காணவேண்டிய முக்கியமான திருத்தலங்களாகும்.


 கீழப்பழூர் ஆலந்துறையார் கோயில் 









கீழையூர் இரட்டைக் கோயில்கள் 



புகைப்படங்கள் : முனைவர் பா.ஜம்புலிங்கம்

தினமணி இதழில் இக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம், தினமணி, 18 நவம்பர் 2016

Comments

  1. விரிவான விளக்கமும் புகைப்படங்களும் நன்று தினமணி இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் - கில்லர்ஜி

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அய்யா தொடர்கிறேன்

    ReplyDelete
  3. இந்த தளத்தையும் இனி தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. அறியாத கோயில் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...இத்தளத்தையும் தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. இதுவரை இந்த கோயில் பற்றி அறிந்ததில்லை. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்

திருநாலூர் மயானம்