செட்டியாபத்து ஐந்துவீட்டுசுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உடன்குடி அருகில் உள்ள செட்டியாபத்து என்னுமிடத்தில் அருள்மிகு ஐந்துவீட்டுசுவாமி கோயில் உள்ளது.

இக்கோயில் எங்கள்  அக்கா வீட்டு (பொன்மதி) குலதெய்வமாகும். இக்கோயிலுக்கு மே 2019இல்  அக்காவின் குடும்பத்தாருடன் சென்றேன். கோயிலுக்குச் சென்ற நினைவுகள்...



இக் கோயிலின் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் எல்லாம்வல்ல பெரிய பெருமாள் அருள்மிகு பெரியசுவாமியாக உள்ளார்கோயில் வளாகத்தில் வயணப்பெருமாள், அனந்தம்மாள், ஆத்திசுவாமி, திருப்புளி ஆழ்வார், பெரியபிராட்டி அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் ஆஞ்சநேயர் சன்னதியும், குதிரை சாமியும் உள்ளன.

கோயில் நான்கு பக்கமும் மதில் சுவர்களுடன் கூடிய ஓரிடத்தில் ஆறு தெய்வங்களுக்கு ஐந்து தனித்தனி சன்னதிகள் வழிபட்டு வருவதால் அருள்மிகு ஐந்துவீட்டுசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது. சன்னதிகளில் உள்ள தெய்வங்களில் பெரியசுவாமி தவிர அனைத்திலும் மூலவருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பக்தர்கள் கருவறை வரை சென்று தெய்வங்களைத் தொட்டு வழிபடும் வழக்கமும், விழாக் காலங்களில் தாங்களே பூஜை செய்யும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

பெரியசுவாமி

கழுகுமலையைச் சேர்ந்த, குழந்தைப்பேறில்லாத வடுகநாதரும், பொன்னம்மாளும் நீராடச் சென்றபோது ஒரு குழந்தையைக் கண்டெடுத்து, தும்பையப்பர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். குழந்தைக்கு ஏழு வயதாகும்போது மீனாட்சியை தரிசிக்க அனைவரும் மதுரை சென்றபோது தும்பையப்பர் காணாமல் போக பெற்றோர் வருத்தத்துடன் ஊர் திரும்பினர். பின்னர் நெடுநாள் கழித்து பெற்றோர் மறுபடியும் மதுரை வந்தபோது தும்பையப்பரைக் கண்டு மகிழ்ந்து, ஊருக்குத் திரும்ப அழைத்துச் சென்றனர். ஊர் திரும்பிய தும்பையப்பர் தனியிடம் ஒன்று அமைத்து மீனாட்சியம்மனுக்கு பூஜை செய்தார். மீனாட்சியம்மன் அழைக்கும் காலம் வரவே, அவர் மறுபடியும் மதுரை சென்றார். அப்போது அன்னை மீனாட்சியம்மன் அவரிடம், புலியும் மானும் ஒன்றாக நீரருந்தும் இடமே அவர் தங்க ஏற்ற இடம் என்றும்,  பின்னர் அவர் பெரியசுவாமி என்று அழைக்கப்படுவார் என்றும், மக்கள் அவரை வழிபடுவார் என்றும் கூறி வாழ்த்தி அருளினார்.

வயணப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள்

பெரியசுவாமியிடம் நிரம்ப பக்திகொண்ட நெசவுத்தொழிலாளியால் வளர்க்கப்பட்ட வயணப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் என்னும் குழந்தைகள் வளர்ந்து திருமணப்பருவத்தை அடைந்தனர். பெற்றோர்கள் அவர்களை கணவன் மனைவியாக்க வேண்டும் என்று பேசியதைக் கேட்ட அக்குழந்தைகள் இருவரும் வருத்தமுற்றனர். நம்மை இவர்கள் கணவன் மனைவியாக ஆக்கப் பார்க்கிறார்களே என்ற மன வேதனையில் பெரியபிராட்டி அம்மனையும் பெரியசுவாமியையும் வணங்கினர்.  தம் பெற்றோர் தொழில் செய்யும் நெசவுக்கிடங்கில் பதுங்கினர். அப்போது பெரியபிராட்டி அம்மன் அவர்கள் இருவரையும் அரவணைத்துக் கொண்டார். இருவரும் தெய்வ வடிவம் பெற்று வயணப்பெருமாளாகவும், அனந்தம்மாளாகவும் தோன்றி பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்

ஆத்திசுவாமி

ஆத்திப்பணிவிடை என்றால் மிகவும் சிரமம். அதற்காக நேர்த்திக்கடனைச் செய்ய ஒருவர் ஒரு ஆத்திக்குட்டி (பன்றிக்குட்டி) வாங்கிவிட்டால் அதனை பக்தியோடும் அன்போடும் போற்றி வளர்த்து வரவேண்டுமேயன்றி ஏனோதானோ என்று வளர்க்கக்கூடாது.  அதனை நல்ல முறையில் வளர்த்தும், உறவினர்கள் அனைவரையும் அழைத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும். சிறிய காரியத்தடையோ சிறிய நோயோ ஏற்பட்டவர்கள் அவற்றை நீக்க மச்சப்பணிவிடை அல்லது கீரிச்சுட்டான் பணிவிடை செய்வதாக வேண்டுவோர், தமக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்கியபின் இச்சன்னதியில் மச்சப்பணிவிடையைச் செய்ய வேண்டும். மற்றப் பணிவிடைகளுக்கு பள்ளிக்கட்டில் முன்வைத்து பிரசாதம் கொடுப்பதைப் போல் அல்லாமல் இந்த இரு பணிவிடை செய்தவர்களுக்கு ஆத்திக்கோயில் சன்னதியில் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.   

திருப்புளி ஆழ்வார்

அன்னை, பெரியசுவாமியின் கனவில் தோன்றி ஆழ்வார்த்திருநகரி செல்லுமாறு பணித்து பின்னர், திருப்புளி ஆழ்வாரின் கனவில் தோன்றி பெரியசுவாமி அங்கு வருவதைத் தெரிவித்தார். தலைமைச்சீடரான சோலையப்பரோடு பெரியசுவாமி அங்கு சென்று அற்புதங்கள் நிகழ்த்தினார். அதனைக் கண்ட திருப்புளி ஆழ்வார், பெரியசுவாமியுடன் செட்டியாபத்து வர விரும்பினார். பெரியசுவாமியும், சோலையப்பரும் அவரை தொட்டிலோடு தூக்கி வந்தனர். அவர் வந்து புளிய மரத்தடியில் தங்கியதால் அப்பெயர் பெற்றார்.     

பெரியபிராட்டி அம்மன்

பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். தொழில் முன்னேற்றம், திருமணம், மக்கட்பேறு, சுகப் பிரசவம், பொருட்செல்வம், செய்வினை, மனநோய்தீர்வு  ஆகியவற்றிற்காக அம்மனை வேண்டுகிறார்கள். 

கோயில் சிறப்பு

இங்கு காணிக்கையாக செருப்பு, கதாயுதம், தேங்காய், முட்டை, கோழி, ஆடு, மது, பன்றி என அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. பெரிய பூசாரி, சன்னதிக்கு வந்து விலங்குகளின் காதுக்குள் மந்திரங்களை ஓதி பாதப்பால் தருவர். பின்னர் சமையல் செய்து சுவாமிக்குப் படைத்து, அவரவர் குடும்பத்தாருடன் அங்கேயே உண்டு மகிழ்வர். இப்படையலை வெளியே எடுத்துப்போகக்கூடாது  என்றும், இந்த அசைவ உணவுகளை கோயில் வளாகத்தில் தயாரிக்கும்போது எந்தவித துர்நாற்றமும் வீசுவதில்லை என்றும் கூறுகின்றனர். பூஜை நேரத்தின்போது மணி அடித்து, சங்க நாதம் முழங்கும் வழக்கம்  உள்ளது. மேளம், நாதஸ்வரம் கிடையாது. பக்தர்களுக்கு உலர்த்திய திருமணிக்கட்டியும், அத்தி  இலையும் பிரசாதமாக வழங்கப் படுகிறது. விபூதி, குங்குமம் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளிலும், சித்திரை 1, 16, 17, 18, கார்த்திகை தீபத்திருநாள், தை 1, 5, பங்குனி 21, மாசி சிவராத்திரி ஆகிய நாள்களில் முழுமையாக பணிவிடைகள் அனுமதிக்கப்படுவதில்லை. பௌர்ணமி, அமாவாசை, புரட்டாசி மாத நவராத்திரி, சித்திரை 23, 24 மற்றும் தை 8 ஆகிய நாள்களில் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது. பாதபால் பெறாமல் கோயிலுக்குள் கடையன், கீரி, ஆத்தி போன்றவற்றை பலியிடுதலோ சமைத்தலோ கூடாது.  





பூஜை, வழிபாடு, அன்னதானம், பலியிடல் போன்றவை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளன.  பொங்கல் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், விலங்குகள் பலியிடல் போன்ற நேர்த்திக்கடன்களை அனைத்து இனத்தவரும் செய்கிறார்கள். தல மரமாக வேம்பு, அத்தி, நாவல் என்பன உள்ளன



இங்கு இரண்டாவது முறையாக அக்கா குடும்பத்துடன் வரும் வாய்ப்பு கிடைத்தது.  கோயிலின் சன்னதிகள், பூசை செய்யும் முறை, சங்கு நாதம் கேட்டல் போன்றவற்றை வித்தியாசமாகக் காணமுடிந்தது ஓர் மறக்க முடியாத அனுபவமாகும். 

Comments

  1. கோவிலை நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது உங்கள் படங்களுடன் கூடிய விரிவான பதிவு..வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்