தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் வெட்டுக்குதிரை வாகன விழா
இன்று, தஞ்சாவூர், கீழ வாசல், அருள்மிகு வெள்ளை விநாயகருக்கு தஞ்சாவூர், நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கத்தால் நடத்தப்படுகின்ற 99ஆவது ஆண்டு வெட்டுக்கு திரை வாகன புஷ்ப விமான உற்சவத் திருவிழாவில் உறவினர்களுடன் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றேன்.
இவ்விழாவை நாடார் இனத்தவர்கள் வருடாவருடம் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இவ்விழாவின்போது பகல் 12 மணிக்கு வெள்ளை விநாயகருக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு மலர், நகை அலங்காரமும், தீபாராதனையும், நாதஸ்வரம் கச்சேரியுடன் நடைபெற்றது.
பின்பு விழாவிற்கு வந்த அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இக்கோயிலுக்கு நான் இளம் வயதில் அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கைளுடன் சென்றுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் சென்றுள்ளேன். திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள், போன்ற நாள்களிலும், விசேஷ நாள்களிலும் செல்கிறேன். ஏதாவது பொருட்கள் தொலைந்தால் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும், உடம்பு சரியில்லையென்றாலும் இவ்விநாயகரை நினைத்து வேண்டிக் கொண்டால் உடல் நலம் சரியாகிவிடும், இவற்றை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். வெளியூர்களுக்குச் செல்லும் பொழுதும் இக்கோயிலின் முன்பாகக் கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்வார்கள். சிதறு காய் உடைப்பார்கள்.
இந்த ஆண்டு இறைவனை மனதுக்கு நிறைவாக சுவாமி தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். விநாயகா போற்றி, போற்றி!
Comments
Post a Comment