மச்சான் முருகேசபாண்டியன் (1943-2021)

இன்று  (10 ஜூன் 2022) எங்கள் மச்சான் திரு. வி.முருகேசபாண்டியன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாள். அருப்புக்கோட்டை அருகில் கல்லூரணியில் 3 மே 1943இல் பிறந்தார். அவருடைய பெற்றோர் திரு. சி.விநாயகமூர்த்தி-திரு. வி.சேர்மதி. அவர் உடன்பிறந்தவர் ஒரு தம்பி, திரு. வி.ரத்தினபாண்டியன். 

மச்சானின் ஏழாம் வயதில்  பெற்றோர் இறந்துவிட, தஞ்சாவூரில் தாய் மாமா திரு. மு.திருவண்ணாமலை நாடார் (எங்கள் அப்பா) வீட்டில் வளர்ந்தார். தூய பேதுரு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தார். 25 பேர் தேர்வு எழுதியதில் நான்கு பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். அவர்களில் மச்சானும் ஒருவர். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட போதிலும் போதிய வசதி இல்லாததால் மேல் படிக்க முடியவில்லை. பிறகு தட்டச்சும்,  சுருக்கெழுத்தும் கற்றார்.

பூண்டியிலிருந்து வந்த கேசவமூர்த்தி என்பவர் எங்கள் அப்பாவிடம் தான் சிவகாசியில் ஒரு கல்லூரிக்கு வேலைக்குப் போவதாகக் கூறியபோது, எங்கள் அப்பா அவரிடம்அக்கா பையன் படித்துவிட்டு இருக்கிறான். நீங்கள் போனதும் அங்கு வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்என்று கூறியுள்ளார். அவர் சிவகாசி சென்று, கல்லூரியில் விசாரித்து அவர்கள் கேட்டுக்கொண்டபடி, மச்சானின் தன்விவரக்குறிப்பினை போஸ்ட் கார்டில் அனுப்பக்கூறியுள்ளார். கல்லூரியிலிருந்து தகுதி அடிப்படையில் அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வில் தேர்ச்சிப்பெற்றார். கல்லூரியில் மாதச் சம்பளம் ரூ.130க்கு டைப்பிஸ்ட் வேலையில் சேர்ந்தார். திருமணத்தின் போது ரூ.150 சம்பளம் வாங்கியுள்ளார்.

மச்சானும், அக்காவும் (1966)

    மச்சான் திரு. வி.முருகேசபாண்டியன்-அக்கா திருமதி ஸ்ரீரங்கவடிவு திருமணம் 1966இல் மதுரையில் நடந்தது. சிவகாசியில் தனிக்குடித்தனம். சில வருடங்கள் கழித்து, தஞ்சாவூர் வந்து, தாய் மாமா வீட்டில் மூன்று மாதம் குடும்பத்தோடு இருந்தார். பிறகு தாய் மாமா அவருக்கு அலுமினியக்கடை வைத்துக்கொடுத்துள்ளார். தஞ்சாவூரில் இரட்டைவார்காரத்தெரு, ஆடக்காரத்தெரு, ஆட்டுமந்தைத்தெரு ஆகிய இடங்களில் குடியிருந்து பின்னர் பிறகு பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் சொந்த வீடு கட்டினார். மச்சான் எப்போதும் ஏதாவது வேலைகள் செய்துகொண்டு இருப்பார். உடம்பை நல்லபடியாக கவனித்துக்கொள்வார். நடைப்பயிற்சி, யோகா செய்வார். பெரும்பாலும் சைக்கிளில் செல்வார். பெரிய குடும்பத்தில் பத்து பேருடன் ஒன்றாக வளர்ந்தவர். எளிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார். காபி, டீ குடிக்கமாட்டார். பால் மட்டுமே குடிப்பார். 

       மச்சானுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், பேரன்கள், பேத்திகள். அக்கா ரொம்ப பொறுமையாகவும், நிதானமாகவும் பேசுவார். அவருடைய சமையல் அனைவருக்கும் பிடிக்கும். குடும்பத்தாரை அனுசரித்து, பக்கபலமாக மச்சானுடன் அக்கா இருந்தார். மச்சானைப் போலவே அக்காவும் பால் மட்டும் அருந்துவார். அக்கா வெளியூருக்குச் சென்றால் மச்சான், அம்மா வீட்டிற்கு சாப்பிட வருவார். அன்று உறவுகளிடையே அதிகமான பாசம் இருக்கும்.  மச்சானை நாங்கள் யங்மேன் என கேலி செய்வோம். அம்மா வீட்டிற்கு வரும்போது எங்களிடம் கேலியாகப் பேசுவார்.  நாங்களும் பதிலுக்குப் பதில் பேசுவோம்.   

மச்சான் ஜோசியம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். பிறருக்கு இலவசமாகச் சொல்லிக்கொடுத்துள்ளார். ஒருமுறை கீழே விழுந்ததால் கடைக்குப் போகமுடியா நிலை. இருந்தாலும் வீட்டில் பொழுதை வீணாக்காமல் ஜோசியம் எழுதிக்கொடுக்கவும் பார்க்கவும் செய்தார்.


2021 ஜூன் 10ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். கொரோனா காலம் என்பதால் யாரும் அவரைப் பார்க்கமுடியவில்லை. அதுதான் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய குறை. மச்சான் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றுமே மறையாது. அவர் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களுக்கு மச்சானின் ஆசி எப்போதும் இருக்கும்

நன்றி: தகவல் தந்து உதவிய திருமதி.மு.ஸ்ரீரங்கவடிவு(வடிவக்கா)

-----------------------------------------------------------------------------------

அந்த நாள் ஞாபகம்....

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மச்சானும், அக்காவும்

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது மச்சான் என்னை டாக்டர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். எனக்கு டெஸ்ட் ஊசி போட்டபொழுது ஒத்துக்கொள்ளாமல் மயக்கம் வந்துவிட்டது. ஆதலால் என்னை அவருடைய வீட்டில் இருக்கும்படிக் கூறினார். அன்று ரேடியோவில் நான் அரங்கேற்றம் திரைப்படத்திலிருந்து ஆண்டவனின் தோட்டத்திலே பாடல் ஒலிபரப்பானது. இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் மச்சான் வீடும், ஜூரம் வந்த நாளும் ஞாபகத்திற்கு வரும். மறுநாள்  வீட்டில் கொண்டுவந்து விட்டார்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவர் மடியில் அமர வைத்து எனக்கு மூக்குக் குத்தினார்கள். என்னைப் பார்க்கும் போது அவர் சிவப்புக்கல்லு மூக்குத்தி எனப் பாட்டுப் பாடுவார்.

என் திருமணத்தில் போட்ட சீர் சாமான்களுக்கு பெயர் வெட்டித்தந்தார். அவ்வெழுத்துக்கள்  அழகாஇருக்கும். மச்சான் கடையில் சில சில்வர் பாத்திரங்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கினேன்.  அவற்றில் சிலவற்றை இன்னும் வைத்திருக்கிறேன்.

மாமியார் என்னை தனிக்குடித்தனம் வைக்க இரு நாளைக்கு முன் தஞ்சாவூருக்கு வந்தார்கள். வாடகைக்குப் பார்த்த வீடு  மச்சான் வீட்டின் எதிர்ப்புறத்தில் இருந்தது. குடிவந்த நாளன்று காலையில் நாத்தனார், கொழுந்தனார் அனைவரும் வந்தனர். வடிவக்கா எங்களை காலை உணவுக்கு வரச் சொல்லிவிட்டார்கள். அங்கு சாப்பிட்டுவிட்டுப் பிறகு பால் காய்ச்சினோம். அன்று எனக்கு மச்சான் ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் மஞ்சளும், உப்பும் கொடுத்தார். அந்தக் கிண்ணத்தை இன்றும் வைத்திருக்கிறேன். இதுவெல்லாம் 34 வருடங்களுக்கு முன்பு  நடந்தது.

என் இரு மகன்களும் பிறந்தபோது அம்மா, அக்காவுடன் மருத்துவமனையில்  மச்சான் துணைக்கு இருந்து உதவிகள் செய்தார். அவரைப்பற்றிநினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். அம்மாவோ, அப்பாவோ எந்த தேவைக்குக் கூறினாலும் மச்சான் அக்காவுடன் முதலில் வந்து நிற்பார். வளர்த்த பாசத்தை அவர் சொல்லும் விதம் ஒவ்வொருவரும் தன் அன்பை அவ்வாறு வெளிப்படுத்தலாம் என்று எண்ணத்தோன்றும். அதுதான் அக்கால உண்மையான பாசம். உறவுகளை விட்டுக்கொடுக்காமலும் உரிமையுடனும், இன்பதுன்பங்களில் பங்குகொள்வார்கள், அந்தக் காலத்தில். இந்த அன்பை நான் மச்சானிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். 

புகைப்படங்கள் நன்றி:  மச்சானின் இளைய மகன் திரு. ஜெயபாபு

Comments

  1. தங்களது பழைய நினைவுகளை சொல்லி விதம் அருமை.
    அவரது ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரிய மனிதர். நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்