சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் இச்சிப்பாளையத்தில் மலைக்குன்றின் மீது 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல 1320 படிகள் உள்ளன. கோயிலின் படிகளில் இரட்டை காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி சில ஆண்டுகள் வரை ஏறி இறங்கி வந்ததாகக் கூறினர். இக்கோயிலுக்கு அண்மையில் குடும்பத்தாருடன் காரில் சென்றோம். 1980களில் என் கணவர் இக்கோயிலுக்கு படிகளில் கால் நடையாக ஏறிச்சென்றதாகக் கூறினார். சிறிய அளவில் கோயிலின் தோற்றம் இருக்கும் என்று நினைத்தேன். மலைமேல் சென்றதும்தான் பெரிய அளவில் அங்கு கோயில்  இருப்பதைக் கண்டேன். முருகனின் ஆறுபடை கோயில்களையும் பார்த்துள்ளேன். ஆனால் இக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது.  








சிரம் என்றால் சென்னி என்றும், கிரி என்றால் மலை என்றும் பொருள்படுவதாகும். அதனால் சென்னிமலையை சிரகிரி என்றழைக்கின்றனர். ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போர் மூண்டபோது ஆதிசேஷனுடைய தலை விழுந்த இடம் சென்னிமலை என்ற பெருமையுடையது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கோயிலில் நுழைந்ததும் கடம்பேஸ்வரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் போன்றவர்களுக்கான  சிறிய சன்னதிகள் உள்ளன.  மூலவராக சுப்பிரமணியசுவாமி உள்ளார். அமிர்தவல்லி, சுந்தரவல்லி சன்னதி உள்ளது. இருவரும் தவம் இருந்து முருகனை திருமணம் செய்ய அருள் பெற்ற இடமாகும். இத்தலத்தின் மரம் புளிய மரமாகும்.  தீர்த்தம் மாமாங்கம் ஆகும். இத்தலத்தில் உள்ள தேர் வேங்கை மரத்தால் செய்யப்பட்டதாகும்.

இத்தலம் பல சிறப்புகளை உடையது. தேவராய சுவாமிகள் என்ற முருக பக்தர் இயற்றிய கந்த சஷ்டி கவசம் என்ற கவச மாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலம் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய இடமாகும். சஞ்சீவிமலை மூலிகைகள் பல இம்மலையில் உள்ளன. இங்கு தினமும் நடக்கும் கால பூஜைகளில் மூலவருக்கு நெய்வேத்தியம் பூஜைகள் முடிந்த பின்னரே சன்னதி விநாயகருக்கு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு வந்து வீற்றிருப்பதால் அவரைச் சாந்தப்படுத்துவதற்காக இவ்வாறு நடக்கின்றது.  

18 சித்தர்களில் ஒருவரான சித்தர் இங்கு இருந்துள்ளார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர் அருள் வாக்கு கூறும்போது நாக்கை பின்னுக்கு மடித்து கூறியதால் பின் நாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அது மருவி புண்ணாக்கு சித்தர் என மாறியது. அவர் சமாதியடைந்த இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். அவர் பயன்படுத்திய குகை இங்குள்ளது. இந்த குகை மூலமாக பழனி செல்லலாம் என்று கூறுகின்றனர்.

தைப்பூசத் தேர்த்திருவிழா சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாள்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.  முருகப்பெருமானின் சிரசுப்பூ உத்திரவு கேட்ட பின்னரே நற்காரியங்களை பக்தர்கள் மேற்கொள்வது மரபாக உள்ளது.  




புகைப்படங்கள் நன்றி : என் கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
நன்றி : உடன் வந்த என் சகோதரிகள் குடும்பத்தார் 

Comments

  1. அந்த உயரத்தைப் பார்க்கும்போது அங்கு செல்லும் ஆவல் வருகிறது.

    ReplyDelete
  2. வாழ்த்துகள். உங்கள் பணி ஆக்கபூர்வமான பணி. நன்றி.

    ReplyDelete
  3. புண்ணாக்குச் சித்தர் பற்றிய செய்தி நான் அறியாதது. கரூர் வழியாக சென்ற நீங்கள் கரூரில் உள்ள எங்கள் இல்லத்துக்கு வந்திருக்கலாமே.

    ReplyDelete
  4. படிகளின் உயரத்தைப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. எப்போதோ போயிருக்க வேண்டிய கோயில். இனி முடியுமா சந்தேகமே! விபரங்கள் அனைத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்