ஒவ்வொரு நாளும் தாய்மொழி நாள்தான்

தாய்மொழியின் பெருமையை  உணர்த்த தாய்மொழி தினம் என்று ஒரு குறிப்பிட்ட நாள் (பிப்ரவரி 21) கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே கருதலாம்.  தினம் தினம் தாய்மொழி தினமாக்குவது பற்றி சிந்திப்போம். முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்.

குழந்தைகளை பழக்கப்படுத்துதல்
இப்போதெல்லாம் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவை மம்மி டாடி என்று கூறுகின்றார்கள். அவ்வாறு பேசும்போது பெற்றோரும் மகிழ்ச்சியடைந்து விடுகின்றார்கள். அவரவர் தாய்மொழியில் பேச வேண்டுமென்று பல நிலைகளில் வலியுறுத்தப்பட்டாலும் நாம் அவ்வாறு செய்வதில்லை. பலர் தம் குழந்தைகளை ஆங்கிலப் பாடல்கள் தான் பாடச் சொல்லிக் கொடுக்கின்றார்களே தவிர, தமிழ்ப் பாடல்களைக் கற்றுக்கொடுப்பதில்லை. அணில் பாட்டு, காக்கா பாட்டு, பாப்பா பாட்டு போன்ற பாடல்களை இப்போது குழந்தைகள் பாடுவதில்லை.  ஆங்கிலவழிப் பள்ளிகள் அதிகமாகி விட்ட நிலையில் தாய்மொழியைவிட்டு சற்று விலகிச் செல்கிறோம். முதலில் குழந்தைகளுக்கு வீட்டில் தாய்மொழியில் பேசினால் போதும். அவர்கள் பழக்கப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

தாய்மொழி நாள் விழா
தாய்மொழி நாளுக்காக விழா எடுக்கிறார்கள். விழாவில் பேச ஆங்கிலப்பள்ளி நடத்துபவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அவ்வாறு வரும் பேச்சாளர்கள்கூட தாய்மொழியைப் பயன்படுத்தி முழுமையாகப் பேசுவதில்லை. ஆங்கிலப்பள்ளியை நடத்திக்கொண்டு பணம் சம்பாதிப்பவர்களை அழைத்து தாய்மொழி நாளில் பேசச் சொல்வதைத்  தவிர்க்கலாம்.

பிற மொழிப்பற்று
இப்போதெல்லாம் குழந்தைகளின்மீது பிற மொழிகளைத் திணிக்கின்றார்கள். தன் குழந்தை ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், மராத்தி, குஜராத்தி என பல மொழிகளையோ ஒரு மொழியையோ கற்றுக்கொள்கிறான் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வாறே தன் பிள்ளைக்கு பிரெஞ்ச் தெரியும், ஜெர்மன் தெரியும் என்று சொல்லி மகிழ்கின்றார்கள். தமிழுக்குத் தொடர்பில்லாத மொழியை கற்க ஆரம்பிக்கும்போது குழந்தைகள் தாய்மொழியான தமிழை முற்றிலும் மறந்துவிடுகின்றன. இவ்வாறு வளரும் பிள்ளைகள் தமிழறிவு இல்லாமல் போவதோடு, பண்பாட்டையும், மரியாதையையும் முற்றிலுமாக மறந்து விடுகின்றார்கள். இவர்கள் தமிழையும் மனதில் வைத்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

உறவு முறை
தாய்மொழி தினம் கொண்டாடுவதைவிட வீட்டில் குழந்தைகளை எப்படிப் பேசுவது என்று சொல்லிக்கொடுக்கலாம். உறவு முறைகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் எப்படி பழகவும் முறை சொல்லிக் கூப்பிடவும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கலாம். இப்பொழுது உள்ள குழந்தைகள் ஒன்று இரண்டு என்றிருப்பதால் குழந்தைகளுக்கு மரியாதை, உறவுகளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் உறவுகளை அழைப்பதே பாசமாகவும் அன்பாகவும் இருக்கும். இப்போ அப்படியெல்லாம் கிடையாது. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அண்ணி, அத்தாச்சி, மச்சான், ஆத்தா, தாத்தா, ஆச்சி, ஆயா, அய்யம்மா, அய்யப்பா, மதனி, அத்தை மகள், என்று முறைவைத்து கூப்பிடுவார்கள். மாமா மகன், அத்தை மகன்களை மச்சான் என்றும், அத்தான் என்றும் கூப்பிடுவார்கள். இப்பொழுது அப்படி சொல்லி அழைப்பது குறைந்துவிட்டது. ஒருசில வீடுகளில், கிராமங்களில் கூப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. இப்படியெல்லாம் கூப்பிடக் கூடாதென்று இப்போதுள்ள தலைமுறையினர் கூறுகின்றனர். முறை சொல்லிக் கூப்பிட்டால் நல்லா இல்லை என்கின்றார்கள். உறவு முறைகளில் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்தி தாய்மொழிப் பயன்பாட்டை நிலைநாட்டலாம்.  

பணியாற்றும் இடம்
வேலை பார்க்கும் இடங்களில் அனைவருடனும் தாய்மொழியில் பேசாமல் அவரவர் அரைகுறை ஆங்கிலத்திலும், தமிழைக் கலந்தும் தமிங்கிலமாகப் பேசுகின்றார்கள். மென்பொருள் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிலையில் பணியாளர்கள் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்துவதே இல்லை. நிறுவனத்தின் மேலாளர் தொடங்கி கடைசிப் பணியாளர் வரை புரியாத மொழியில், துண்டு துண்டாக வார்த்தைகளை வெட்டிப் பேசி புரிந்தும் புரியாமலும் நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேவையான நேரத்தில் அவ்வாறு பேசிவிட்டு, பின்னர் நேரம்கிடைக்கும்போதோ, தமக்குள் உரையாடிக்கொள்ளும்போதோ தமிழில் பேசலாமே.   

மேற்கண்டவற்றை நாம் கடைபிடித்தாலே தினமும் தாய்மொழி நாளாக அமையும். 

Comments

  1. தங்களது ஆதங்கம் நியாயமானதே... இன்றைய குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. அடிப்படை காரணம் தமிழ் மொழியை பேச மறுப்பதே...

    //ஆங்கில வழிப் பள்ளிகள் அதிகமாகி விட்ட நிலையில் தாய்மொழியை விட்டு சற்று விலகிச் செல்கிறோம்//

    சற்று அல்ல! நிறையவே விலகி விட்டோம்.

    மம்மி-டாடி என்று அழைக்கச் சொல்வதே பெரியவர்கள்தான் பிறகு குழந்தைகளை குறை சொல்லி என்ன செய்வது ?

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை. தமிங்கலம் என்பது நல்ல சொல்லாடல். உறவு முறையில் மாமன் மனைவி மாமி. அது ஒரு ஜாதிப்பெயராக மாறிவிட்டது. தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை . பாராட்டுக்கள். என்று தணியும் இந்த ஆங்கில மோகம்?

    ReplyDelete
  4. உண்மை
    உண்மை
    அருமையான அலசல்

    ReplyDelete
  5. நல்ல பதிவு... என் ஆதங்கமும் இது தான்...இவை எல்லாவற்றிற்கும் காரணம் பள்ளிகளில் தாய்மொழி உதாசீன படுத்தப்பட்டது தான்.. பிள்ளைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்... அடுத்தடுத்த தலைமுறையாவது தமிழை வளர்க்கட்டும்...

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்