நெஞ்சமெல்லாம் சிவம் : சிவம் 100

என் அண்ணி திருமதி கண்மணி ராமமூர்த்தியின் தந்தையான திரு சி.மு.சிவம் (சி.மு.சிவலிங்கம்) அவர்களுடைய நூற்றாண்டு நினைவாக அக்குடும்பத்தார் ஒரு அழகான மலரை உருவாக்கியுள்ளனர். அதில் அவருடைய மகன்கள்-மருமகள்கள்,  மகள்கள்-மருமகன்கள், பேரன்கள்-பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்-பேத்திகள் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதியுள்ளனர். குடும்பத்தார் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனும் அவர் உள்ள அரிய புகைப்படங்கள் அந்த மலரில் உள்ளன.   


அவருடன் பழகிய அனுபவம், அவரைப் பற்றி கேட்டு அறிந்த அனுபவம், அவருடைய பாசம், எண்ணம், துணிச்சல், பழக்க வழக்கங்கள், மரியாதை, நற்பண்புகளை அவர்கள் எழுதியுள்ளனர். அனைவருடைய மனதிலும் இடம்பெறும் வகையில் அந்த நினைவுகள் காணப்படுகின்றன.

அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாகக் காண்போம்.
விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் பிறந்தார். (29.7.1919)
பெரியாரால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைத் தொண்டரானார் (1933-36)
இந்தித்திணிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்டார்  (1938)
காரைக்கால் வணிகரின் மகள் கோவிந்தம்மாளை சடங்கு மறுத்து சுயமரியாதை திருமணம் செய்தார். (21.8.1940)
காரைக்காலில் திராவிட கழகத்தைத் தொடங்கினார் (1940)
காரைக்காலில் இயற்கையெய்தினார். (17.8.1987)
பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயர்ச் சூட்டினார்.

இறப்பதற்கு முன்பு மரண சாசனம் எழுதிவைத்தார்.
இறுதி மூச்சு வரை பெரியாரின் பெருந்தொண்டராக இருந்தார்.  
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

என் அண்ணியின் தந்தையான அவரை நேரில் பார்த்திருந்தபோதிலும், பல முறை காரைக்கால் சென்றபோதும் அவரிடம் பேசியதில்லை. எங்கள் அண்ணி மூலமாக அவரைப் பற்றி அறிந்தேன். தன் தந்தையைப் போலவே அவருடைய இளைய மகளான என் அண்ணியும் கண்டிப்பு, பாசம், மன உறுதி, துணிச்சல் போன்ற அறிவுரைகளை அனைவருக்கும் கூறுவார்கள்.  

நூலாசிரியர் திருமதி சிவசங்கரி கதிரவன்

என் அண்ணி திருமதி கண்மணி ராமமூர்த்தி
“நெஞ்சமெல்லாம் சிவம்  : சிவம் 100” என்ற இந்த மலரை வெளியிடக் காரணமாக இருந்தவர் அவருடைய மூத்த மகளின் இரண்டாவது மருமகளான திருமதி சிவசங்கரி கதிரவன் ஆவார். நான்கு தலைமுறையினரைச் சேர்ந்த குடும்பத்தாரை அணுகி, அவரவர்களின் அனுபவங்களைப் பெற்றதோடு, உரிய இடங்களில் புகைப்படங்களையும் தந்தது பாராட்டுக்குரியதாகும்.  ஆல மரத்தின் வேரும் கிளைகளும், விழுதுகளும் என்று தலைப்பிட்டு குடும்பத்தவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ள விதம் அருமை. 

குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்நூல் வழங்கப்பட்டுள்ளது. இதனை சிவம் அவர்களின் குடும்பத்தார் விழா நடத்தி வந்திருந்தோருக்கு வழங்கி மகிழ்ந்தனர். என் அண்ணிக்கு வந்த நூலை நான் பார்த்து, பகிரும் வாய்ப்பு கிடைத்தது. (இந்த நூல் விற்பனைக்கு அல்ல என்பதைக் கனிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்)

Comments

  1. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
    போற்றுவோம்

    ReplyDelete
  2. சிறப்பு...

    வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

வாசிப்பை நேசிப்போம் : தினமணி

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்