வாசிப்பை நேசிப்போம் : தினமணி

உலக புத்தக தினமான இன்று (23 ஏப்ரல் 2017), தினமணி சென்னைப்பதிப்பில் கருத்துக்களம் பகுதியில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் 7 ஜுலை 2014 அன்று வெளியான என் கட்டுரையை பகிர்வதில் மகிழ்கிறேன், 
அவ்விதழுக்கு நன்றியுடன். 

ஒரு விடுமுறையின்போது படிக்கும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்து செய்தித்தாளை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, வாசிப்புப் பழக்கம் பல பயன்களைத் தந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

திருமணத்திற்கு முன்பாக நான் ரேடியோவில் பாட்டுகள், செய்திகள், ஒலிச்சித்திரம் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை எனது சகோதரர்கள் கதைப்புத்தகம் வாங்கித் தருவார்கள். அதை சகோதர - சகோதரிகள், அண்ணிகள் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். என் தந்தை அவ்வப்போது செய்தித்தாளை வாங்கிப் படிப்பார்கள். அப்போது வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது.

எங்களது திருமணத்திற்குப் பின் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார் என் கணவர். எனக்கு அப்போது படிப்பில் கவனம் இல்லை. குடும்பத்தைக் கவனிப்பதும் தொடர்ந்து மகன்களை வளர்ப்பதிலும்தான் கவனம் இருந்தது. படிப்பு என்பது ஏதோ ஒரு அனாவசிய சுமை போல எனக்கு அப்போது இருந்தது. என் கணவரோ பல ஆண்டுகளாக ஆங்கில நாளிதழ் வாசகர். நாங்கள் வீட்டில் மகன்களோடு நாளிதழைப் படிப்போம். விடுமுறை நாள்களில் எங்களது வாசிப்பின் நேரம் அதிகமாக இருக்கும். என் கணவர் எனக்கும் என் மகன்களுக்கும் ஆங்கில நாளிதழை வாசித்து அதைத் தமிழில் அப்படியே சொல்லித் தருவார்.

எங்களது இரு மகன்களும் அவ்வாறு படிக்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இரு மகன்களும் தினமும் மாறி மாறி ஆங்கில இதழைத் தமிழில் படித்துக் காண்பிப்பர். இவர்கள் பேசுவதையும் வாசிப்பதையும் நான் தொடர்ந்து கேட்பேன். நான் இவ்வாறு கேட்கும்போது வீட்டில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சியை அணைத்துவிடுவோம். புதிய சொல், புதிய செய்தி, புதிய சம்பவம் என சுவாரசியமாக எங்களது வாசிப்பு தொடரும். மகன்கள் படித்து வேலைக்குச் சென்றவுடன் செய்தித்தாள் வாசிப்பைத் தொடர ஆரம்பித்தேன். எங்கள் குடும்ப நண்பர் ஒருமுறை ஏதாவது ஒரு செய்தித்தாளை தினமும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் உண்டாக்கினார். ஐந்து வருடங்களாகத் தான் தமிழ் நாளிதழ் (தினமணி) படித்துவருகிறேன்.

முன்பு தொலைக்காட்சி எங்காவது ஒரு வீட்டில் இருக்கும். அதில் செய்திகள், பாட்டு கேட்பது வித்தியாசமாக இருந்தது. தொலைக்காட்சியில் செய்தி கேட்கும்போது சமயத்தில் படத்துடன் பார்க்க வாய்ப்பு உள்ளது. சில செய்திகளைத் திரும்பத் திரும்பப் போட்டுக் காண்பிப்பர். விபத்து போன்ற செய்திகளை அவ்வாறு காண்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும். இவ்வகையான பாதிப்பினை செய்தித்தாள் ஏற்படுத்தாது. தற்போது மாணவ - மாணவிகள் முதற்கொண்டு டச்போன், நெட், பேஸ்புக் என்ற நிலையில் பேசிக்கொள்கிறார்கள். அவை தொடர்பான செய்திகளைக் கூறுகிறார்கள். ஆனால் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் பற்றிக் கேட்டால் விழிக்கிறார்கள். எட்டாவது படித்த என்னால் அவர்கள் கேட்கும் நாட்டு நடப்புகளுக்குப் பதில் கூறமுடியாது.

வீட்டில் இருக்கும் பெண்மணிகள்கூட செய்திகளைப் பார்ப்பது, கேட்பது போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறார்கல். என் தாயார், வயது 83. வீட்டில் தொலைக்காட்சியில் செய்தி கேட்கிறார்கள். செய்தித்தாளைப் புரட்டி தலைப்புச் செய்திகளைப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்து ஐந்தாம் வகுப்பு படித்த அவர்கள் செய்தித்தாள் படிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பேரன் பேத்திகளால் பதில் கூறமுடியவில்லை.

என் மாமியார், வயது 70. ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள். 10 வருடங்களுக்கு முன்பே தன் பேத்தியின் கணவர் ஜம்முவில் ராணுவத்தில் பணியாற்றிய இடமான ரஜோரிக்குத் தனியாகச் சென்றார்கள். திரும்பி வரும்போது பேத்தியின் குடும்பத்தோடு வந்தார்கள். அவர்கள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை ஈடுபாட்டோடு படிப்பார்கள்.

வேலைக்குப் செல்பவர்கள் வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசி அதற்குப் பின் படிப்பைப் பற்றியும், வாசிப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருப்போர் உரிய நேரத்தை அதற்காக ஒதுக்க வேண்டும். பொது அறிவைப் பற்றியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போதைய தலைமுறையினர் பேஸ்புக், பிளாக், டச்போன், ஐபேட் போன்றவற்றை தம் அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலவேண்டும். 

தமிழகத்தில் இந்தியாவில், வெளிநாட்டில் நடந்த மற்றும் நடக்கின்ற அரசியல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதனைப் பற்றி நண்பர்களோடும், உறவினர்களோடும் கலந்துபேச வேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் நல்ல நூல்களை வாசித்தல், செய்தித்தாள் வாசித்தல் போன்ற பழக்கங்களை உண்டாக்க வேண்டும். அவர்களும் இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். 

இதுபோன்ற வாசிப்பின் முக்கியத்துவத்தை நம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் சரியான வாழ்க்கைப் பாதையில் செல்வதோடு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகவும் அமைவர்.

Comments

  1. இன்றைய குழந்தைகளுக்கு அவசியமான விடயத்தை அழகாக சொன்னீீர்கள்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்