மரப்பாச்சி பொம்மைகள்

அண்மையில் தினமணி நாளிதழில் வெளியான (வி.என்.ராகவன், மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள் , தினமணி, கொண்டாட்டம், 23 பிப்ரவரி 2025) கட்டுரையைப் படித்ததும் என் சிறு வயது நினைவுகள் மனதிற்கு வந்தன. இந்தப் பொம்மைகள் அனைவரின் வீட்டிலேயும் அப்போது இருக்கும். அன்று பெரியவர்கள் இந்த பொம்மைகளைக் கொண்டு செய்த கைவைத்தியத்தை இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சளியோ, காய்ச்சலோ வரும்போது இந்தப் பொம்மையை வைத்து பத்து போடுவதற்கு எங்கள் அப்பாயி, எங்கள் அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். பின்னர் எங்களுடைய பெரியக்கா, இந்த முறையைப் பயன்படுத்தியதோடு, இந்தப் பத்தினைத் தாய்ப்பாலிலும் கலந்து போடலாம் எனக் கூறியிருக்கிறார்கள். என் மாமியார் அந்தக்கலவையில் கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தித்தூள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் போட்டு நல்ல விளக்கில் சூடேற்றி, அதைக் குழந்தைகளின் உச்சந்தலை, நெற்றி, மார்பில், உள்ளங்கால்களில் தேய்த்துவிடுவதைப் பார்த்துள்ளேன். எனக்கு என் மாமியார் இந்தக் கைவைத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களைப் பின்பற்றி நான் என் மகன்களுக்கும...